Monday, July 14, 2014

இது செல்வராகவன் கதை இல்லை!


விக்னேஷ் அன்று ரொம்ப சந்தோசமாக இருந்தான். அவன் நீண்ட நாளாக காத்திருந்த ,  ஒரு எம் என் சி கம்பெனியில் மென் துறை வல்லுநர் வேலை. அவன் தங்கியிருந்த இளவட்ட மேன்சனில் அவனுக்கு ஒரே பாராட்டு மழை. "மச்சக்காரன்டா , இனிமே உன் காட்டுல ஒரே பொண்ணுங்க மழைதான் !" என்று ஆளாளுக்கு ஏத்தி விட்டுப் போனார்கள்.


விக்னேஷ் கிராமப் புறத்தில் உள்ள ஒரு கல்லூரியில் , கணிப்பொறியியல் படித்தவிட்டு, அங்கே இங்கே என்று கிடைத்த வேலையை பார்த்து விட்டு , இப்போது தான் , ஒரு நல்ல வேலையை ஒரு வழியாகப் பிடித்தவன். அவன் துரதிர்ஷ்டம் , அவன் இது வரைப் பார்த்த வேலையில் இதுவரை பெண்களே இருந்ததில்லை. அதற்காகவே , அவன் ஒரு நல்ல கம்பனியில் , பெண்கள் புடை சூழ , வேலை செய்ய வேண்டுமென்பது அவன் அவா.

அன்று வேலைக்கு சேரும் நாள். ஆவலுடன் , இருப்பதில் நல்ல உடையாக தேர்ந்தெடுத்து உடுத்திக் கொண்டு போனான். அந்த எம் என் சி  கம்பனியில் நுழைய எத்தனிக்க , அங்கிருந்த வடக்கத்தி காவலாளி பேட்ஜ்  இல்லாத இவனைப் பார்த்தவுடன் , புதுசு என்று தெரிந்து கொண்டு தன் பவுசைக் காட்ட ஆரம்பித்தான். 'எங்கே போற பெரிய மொதலாளி மாதிரி ' என்ற தொனியில் அவனை மறித்தான். அவனிடம் தன்னிடம் இருந்த ஈமெயில் காட்ட , 'உள்ள போயி , வலது பக்கம் திரும்பி , அங்க இருக்கிற கான்பரன்ஸ் ஹாலில்  உக்காரு' என்று உடைந்த ஆங்கிலத்தில் கட்டளையிட்டான்  அந்த காவலாளி.

தான் கொண்டு வந்திருந்த எல்லா சான்றிதழ்களையும் சோதித்துவிட்டு  அவனை அவசர புகைப்படம் எடுத்து, கையில் சுடச் சுட  'ஐ டீ ' கார்டை நீட்டினார்கள். பின், 'ஓரியன்டேசன்' என்ற பெயரில் நாள் முழுதும் கம்பனி பாலிசிஐ வாந்தி எடுத்து , அவனையும் , மற்ற புதுசுகளையும் நனைத்து எடுத்துவிட்டார்கள். விக்னேசின் ஒரே ஆறுதல் , சில பல பளிச் பிகர்கள். கிடைத்த லஞ்ச் கேப்பில் ஜொள்ளு விட கிடைத்த சந்தர்ப்பம். இருந்த சில பல பளிச்களில் அவனுக்குப் பிடித்த பிகரை , மனதுக்குள் 'லைக்' போட்டுக் கொண்டான்.


மறு நாள், அவன் டீமை சந்திக்கும் நாள் என்பதால் ஆவலுடன் , வேலைக்கு  முன்னதாகவே வந்து விட்டான் . அன்று 'ஐ டீ' இருந்ததால், மிஸ்டர் பீன் போல் அதை தூக்கி காட்டிக் கொண்டே உள்ளே போனான். அதிசயமாக எல்லா காவலாளிகளும் அவனுக்கு 'காலை வணக்கம்' வைத்தனர்.

அவன் டேமஜருக்காக காத்திருந்தான். அப்போது அந்த அதிசயம் நடந்தது. ஆம் அங்கே , அவன் முன்பு லைக் போட்டு வைத்த பிகர் , அங்கே வந்தாள் . வந்தது மட்டுமில்லாமல் , 'ஹாய் ' என்றாள். அவ்வளவு தான் , விக்னேசின் மண்டையில், உடனே , ஜி.வீ பிரகாசுடன் , நா முத்துக் குமாரும் சேர்ந்து , புதுசாக மெட்டுப் போட்டு பாட்டே கட்டமைக்க ஆரம்பித்து விட்டார்கள்.

--தொடரும்