Thursday, July 25, 2013

பேய் இருக்கிறதா இல்லையா?

மனிதனின் பிரதான உணர்ச்சிகளில் ' பயம்' ஒரு  முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது என்பதில் யாரும் ஐயம் கொள்ளத் தேவையில்லை. அதிலும் 'பேய்' பயம் என்றால் சொல்லவே வேண்டாம். இந்த 'பயத்தை' வைத்து எத்தனையோ பேர்கள் பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

வாய்வழிக் கட்டுக்கதைகள் , எத்தனை சினிமாக்கள் , புத்தகங்கள் , பில்லி , சூன்யம் மாந்த்ரீக வேலைகள் என்று இந்த பேயை வைத்துத்தான் வித விதமான வியாபாரங்கள்.  சிங்கப்பூர்  ஒரு சிறிய நாடென்றாலும் இங்கும் தினமும் எண்ணற்ற பேய் கதைகள் உருவாகிக் கொண்டுதான் உள்ளன.  "Singapore Ghost Stories" என்று ஒரு புத்தகமே போட்டு  பரபரப்பாக விற்பனையாகிக் கொண்டுள்ளது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.  புதிதாக வீடு வாங்குபவர்கள் , கிரகப் பிரவேச பூஜை செய்வதோடு நிறுத்தாமல் , பேய் ஓட்டும் சிறப்பு நிபுணர்களை கொண்டு வந்து பேய் ஓட்டுவதையும் மறக்காமல் செய்து விடுவார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

சிங்கப்பூரில் அடுக்குமாடிக் கட்டடங்களில் வசிப்போருக்கு ஏற்படும் பொதுவான பேய் அனுபவம் என்னவென்றால் , நடு  இரவில் , அவரவர் தங்கியிருக்கும் வீட்டின் மேல் தளத்திலிருந்து 'டொக், டொக்' என்று மெலிதாகத் தட்டும் சத்தம்.  இதனை என் பல நண்பர்கள் அனுபவித்து  சொல்லக் கேட்டிருக்கிறேன். நானும் கேட்டிருக்கிறேன். "எவண்டா இந்த நேரத்துல லூசுத் தனமாத் தட்டிக்கிடுருக்கான்" என்று  படுத்துவிடுவது என் பழக்கம். ஆனால் சில நண்பர்கள் பயத்தில் வீட்டையே காலி செய்துவிட்டு வேறு வீடு பார்த்துக் கொண்டதையும் கேள்விப்பட்டுள்ளேன்.

இந்த பேய் பயம் , பொதுவாக நாம் பள்ளிப் பருவத்தில் இருக்கும் போது தான் நமக்குள் சக மாணவர்கள் சொல்லும் கதைகளை வைத்து கருவாகி பின் உருவாகிறது என்றால் மிகையாகாது.
நான் பள்ளியில் படிக்கும் போதெல்லாம் , 'தலையில்லா முண்டம்' ஊருக்குள் சுத்தி வருகிறது என்று ஒரே பயம் காட்டிக் கொண்டிருந்தார்கள்.  சரி அந்தக் காலத்தில் தான் அப்படி என்றால் , இப்போதும் இது மாதிரி பள்ளிகளில் அவ்வப்போது யாரவது எதையாவது கிள்ளிப் போட்டு அது எல்லாக் குழந்தைகள் மனதிலும் கிலி உண்டாக்குவதை கேள்விப்படும்போது அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை.

சமீபத்தில் கூட என் மகள் பள்ளி போய்விட்டு வந்து ஒரே அழுகை. என்னவென்று கேட்டபோது, 'ஏதோ பிறந்த குழந்தை ஒன்று பேசியதாகவும், நான் சிறு பெண்களைக் கொன்று ரத்தத்தைக்  குடிக்கப் போகிறேன்' என்று சொன்னதாக யாரோ பீலா விட்டு , தமிழ் நாடே அல்லோகலப் பட்டதை கேள்விப் பட்டு இருப்பீர்கள்.

என்னடா பேய் இருக்கிறதா , இல்லையா என்று பட்டி மன்றத் தலைப்பை விட்டு விட்டு என்னமோ மொக்கை போடுறானே என்று யோசிகிறீர்களா, முதலில் நான் சிறு பிள்ளையாக இருந்தபோது ஏற்பட்ட அனுபவத்தை சொல்லிவிடுகிறேன். அதனை வைத்து பேய் இருக்கிறதா , இல்லையா என்று நீங்களே முடிவு கட்டிக் கொள்ளுங்கள்.

என் அப்பா பாட்டி மற்றும் தாத்தா ,  கேரளாவில் உள்ள 'கஜனாப் பாறை' என்ற இடத்தில் ஏலக்காய் தோட்டம் வைத்து அதனைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். என் அப்பா தன்  அம்மாவைப் பார்க்க புறப்பட்டபோது  சிறுவனான என்னையும் கூட , அவரின் அலுவலக ஜீப்பில் அழைத்துக் கொண்டு போனார். இந்த கஜனாப் பாறை , மூணாறு போகும் வழியில் உள்ளது , எங்கு பார்த்தாலும்  ஏலத் தோட்டம் அல்லது தேயிலைத் தோட்டம் என்று பார்க்க அழகாக இருக்கும்.

போடியிலிரிந்து மூனாறு சென்றவர்களுக்குத் தெரியும் , அந்த பாதை எவ்வாறு பாம்பின் உடல் போல் வளைந்து நெளிந்து மேலே செல்லும் என்று. பெரும்பாலான  சமயங்களில் ஒரே குண்டும் குழியுமாக இருக்கும் தமிழக எல்லையான போடிமெட்டுவை அடையும் வரை. போகும் வழியில் ஒரு சிறு அருவி கூட உண்டு, மழைக் காலத்தில் வெள்ளிக் கம்பி போல் நீர் வீழ்வது பார்க்க நன்றாக இருக்கும்.

ஒரு வழியாக அதில் பயணித்து என் பாட்டி  வீட்டை அடைந்து, அளவளாவி , விருந்து உண்டு , மாலையாகி விட்டது. அலுவலக ஜீப்பில் வந்ததால் அன்றே திரும்ப வேண்டும் என்றும் அப்பா கிளம்பத் தொடங்கினார். நானும் அரை மனதுடன் அவருடன் கிளம்ப வேண்டியதாயிற்று மறு தினம் பள்ளிக்குப் போகவேண்டும் என்பதால்.

நாங்கள் அங்கிருந்து கிளம்பியபோதே மெதுவாக இருட்டத் தொடங்கும் வேளை. நான் சொன்னமாதிரி இருட்டில் அந்த மழைப் பாதையில் ஓட்டுவது சிரமம் என்பதால் போக்குவரத்து மற்றும் ஆள் நடமாட்டம் மிக மிக அரிது. இருந்தாலும் வேறு வழியில்லை ஊருக்குத் திரும்பியே ஆக வேண்டும் என்பதால் , வண்டி சீரான வேகத்தில் அந்த வளைந்து நெளிந்த பாதையில் இறங்கிக் கொண்டிருந்தது.

கால்வாசி தூரம் இறங்கும் முன்னரே , ஆதவன் மறைந்து , நல்ல கும்மிருட்டாக இருந்தது. என் நினைவில் மேல் நோக்கி எந்த வண்டியும் ஏறிப் போனதாகத் தெரியவில்லை. எங்கள் வண்டியின் பின்னாலும் எந்த வண்டியும் வருகிற மாதிரியும் அறிகுறி இல்லை. வண்டி நடுக் காட்டில் போய்க் கொண்டிருந்தது. சுத்தமாக மனித , வாகன நடமாட்டம் அற்ற இடத்தில் வண்டியில் நாங்கள்.


நான் வண்டியின் முன் விளக்கு பாதையைத் தாண்டி வீழ்ந்து வழி காட்டுவதை வேடிக்கைப் பார்த்து கொண்டே ஜீப்பின் பின் சீட்டில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தேன் , அப்புறம் அந்த இருட்டில் பொழுது போக்க  வேறு வழி?

அப்போதுதான் அது நடந்தது. ஒரு வளைவில் எங்கள் ஜீப் திரும்பும் போது வண்டியின் முன் விளக்கு வெள்ளிச்சம் பட்டதில் நான் அந்த உருவத்தைப் பார்த்தேன். அது ஒரு பெண் உருவம் தனியாக நின்று கொண்டிருந்தது. அது ஒரு நடுத்தர வயது பெண்மணி. அவள் மூக்கில் இருந்த தங்க மூக்குத்தியில் விளக்கு வெளிச்சம் பட்டு டால் அடித்தது. இப்போது நினைத்தாலும் அந்த  முகம் என் நினைவில் ஒரு சில்லிப்பை  தோற்றுவிக்கிறது.  அது விட்டலாசார்யார் படங்களில் வருவது போல் , முடியை விரித்துப் போடவில்லை. நார்மாலக ஒரு பெண்மணியாகவே இருந்தது. அதனால் எனக்கு அப்போது ஒன்றும் தோணவில்லை.

ஒரு வழியாக எங்கள் ஜீப் அடிவாரத்தை அடைந்து , போடியை நோக்கி செல்லத் துவங்கும் வேளையில் , திடீர் என்று ஒரு டயர் பஞ்சர் ஆகி விட்டது.  டிரைவர் கொஞ்சம் ஸ்லொவ் செய்து விட்டு , ஸ்டெப்னி வேறு இல்லை , நகருக்குச் செல்ல இன்னும் கொஞ்ச நேரம் தான் என்று வண்டியை ஒருவாறு அட்ஜஸ்ட்  செய்து ஓட்டத் தொடங்கினார்.  அப்போதும் எனக்கு என்றும் தோணவில்லை.

இருபது நிமிட பயணத்திற்குப் பிறகு ஒரு வழியாக டிரைவருக்குத்  தெரிந்த வொர்க்ஷாப்பில் வண்டியை நிறுத்தி , பஞ்சர் பார்க்கச் சொன்னார் டிரைவர். பஞ்சர் வேலை நடக்கும் போது , என் அப்பா , மெதுவாக பேச்சை  ஆரம்பித்தார். 'டிரைவர் , நீங்க வழியில  ஒரு பொண்ணு கிராஸ் ஆச்சே பாத்தீங்களா ? " என்று .  அவர் , 'இல்ல சார் நான் எதுவும் பாக்கலியே ' என்றார்.  நான் முந்திரி கொட்டைபோல் , 'நான் பார்தேன்ப்பா ' என்றேன்.  அப்போது அந்த பஞ்சர் ஓட்டுபவர் , 'எந்த இடத்துல வச்சு பாத்தீங்க சார்' என்று என் அப்பாவை கேட்க, அவர் இந்த மாதிரி ஒரு வளைவுக்குப் பக்கத்தில் பார்த்ததையும் , சுற்றி கண்ணுக் கேட்டிய தூரம் வரையில் வீடு எதவும் இருந்த மாதிரி தெரியவில்லை என்றார் என் அப்பா.  அந்த பஞ்சர் கடைகாரர் , எந்த இடம் அது என்று மூளையை கசக்கி கேள்வியாக கேட்டு ,
'ஒ அந்த புலியூத்து அருவி பக்கம் இருக்கிற வளைவா  சார் , அது ஒரு டேஞ்சரஸ் வளைவாச்சே   சார், போன  வாரம் கூட ஒரு பஸ் ஆக்சிடெண்ட் , ஜீப் ஆக்சிடென்ட் ஆச்சு , அப்படி இப்படின்னு பொழுதண்ணிக்கும் ஆக்சிடன்ட் சார் அங்க , ஒரு வேளை நீங்க பார்த்தது பேயா கூட இருக்கலாம் ' என்று மெல்ல கொழுத்திப் போட்டார். என் அப்பாவும் , 'நல்ல வேலை  எங்க டிரைவர் பாக்கலை , அவர் பாட்டுக்கு வண்டிய நிறுத்தி விசாரிசிருந்தா என்ன  ஆயிருக்குமோ ' என்று அவர் பங்குக்கு சொல்லி , என் பேய் பயத்தை கப்பென்று நெஞ்சில் பச்சக் என்று ஓட்ட வைத்து விட்டார்.

அன்றிலிருந்து எனக்கு அவ்வப்போது பேய் பயம் வருவதுண்டு இரவில் தனியாக இருக்கும்போது , குறிப்பாக கல்யாணத்திற்கு முன்பு வரை. கல்யாணத்திற்கு பிறகு இல்லையா என்று கேட்குறீங்களா?

எப்படி இருக்கும் அதான் ஒரு பேய்  கூடவே வாழ்க்கை நடத்துரனே!

ஐயோ!!!!!!!!!!!!! அம்மா கொல்றாலே !!!!!!!!!!!! ( என் மனைவி இந்த பதிவை எழுதும் போது பார்த்துவிட்டாள் )



நான் முன்னர் எழுதிய மற்றொரு பேய் அனுபவத்தையும் படியுங்கள் :   காஞ்சனா பார்ட் 3 - ரஜினி ஹீரோ ?


நன்றி மீண்டும் வருக!



Tuesday, July 23, 2013

ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லை!!!

  •    தலைப்பை கொடுத்த வாலிக்கு இறை அஞ்சலி.

  •    சொன்னா புரியாது படத்தின் ஒரு காமடி டயலாக் , ஹலோ எப் எம்மில் அடிக்கடி போடுகிறார்கள் , கொஞ்சம் கடி என்றாலும் சட்டென்று சிரிப்பை வரவழைத்தது :
              மனோபாலா:  உன் பேர சொன்னதுக்கே இந்த அடி அடிகிரானுங்க 
            சிவா :       என் புல் நேம் சொன்னீங்களா?
              மனோபாலா :  உன் புல் நேம் என்ன?
                சிவா :   என் புல் நேம்  'சிவா '

  •  ஆனாலும் மிர்ச்சி சிவா ,  தமிழ் பட நெனப்புலேயே வண்டி ஓட்டுனா எப்படி , கொஞ்சம் நடைய  மாத்துங்க , இல்லன்னே சீக்கிரம் காணாமப் பூடுவீங்க.

  • இயக்குனர் இமயத்தின் சமீபத்திய படத்தில் விரல் சூப்பும் காட்சியை சிலாகித்தவர்கள் / வெறுத்தவர்கள் , மரியானில் கதா நாயகி லாலி பாப் சாப்பிடுவதை டைட் குளோசப்பில் காட்டியதை குறிப்பிடக் காணோம் , ஒரு வேளை ரொம்ப சார்டாக இருந்ததினாலோ ?

  • அஜித்,சாலினி போல் இணை  பிரியாமல் ஜோடியாக இருப்போம் என்று தலையில்  அடித்து சத்தியம் செய்யும் சிம்புவிற்கு , அப்பா , அம்மாவைப் போல் என்று சொல்லத் தெரியவில்லை ஏன்? அவங்களுதும் காதல் கல்யாணம் தானே

  •   ரஜினிக்கு ஏன் இவ்வளவு தடுமாற்றம் கோச்சடையானை வெளியிடுவதில், பேசாம  மகள் விருப்பத்திற்கே விட்டுருக்கலாம்.

  • இவரால் பாவம் கே எஸ் ரவிக்குமார்க்கும் கெட்டகாலம் …ஹிட்டு கொடுத்து நாளாச்சு ….முதல்ல இவர நம்பி அவர் ஜக்கு பாயி ஆரம்பிச்சு அப்புறம் டிராப் ஆகி , பின்ன சரத்குமார் மூலமா பிளாப் ஆகி …

  • பிரபல  நாளிதழில்  ,  தலைவா படத்துனால , விஜய் மேல அம்மா   காண்டாகி , அவரையும் , அந்த பட தயாரிபாளரையும்   உள்ள போட்டுடாங்கன்னு குத்து மதிப்பா அடிச்சு விடுரானுங்கோ , யாரும் கோபப் படக் காணுமே…  படத்த ஓட வைக்க என்னமா ரீல் வுடுரானுன்கப்பா.

  • காற்றுள்ள போதே தூற்றிக் கொள்லனும்மின்னு இன்னைக்கி பொறந்த நாள் கொண்டாடும் அந்த கீரோ அண்ணனும் ,கீரோ  தம்பியும்   படம் வெளியிட்டு  காசு பாக்கிறது சில பேருக்கு ஏன் உறுத்துது …  தொன்று தொட்டு எல்லா கீரோவும் துட்டுக்கு தான மாரடிகிறாங்க ?

  • இந்த ஹோட்டல் ல அந்த அயிட்டம் நல்லாருக்குமின்னு  தேடிப்போனா அன்னைக்கி மட்டும் கன்றாவியா கொடுகிரானுன்களே ஏன் ?

பின் குறிப்பு :  பல பிராப்ள பதிவர்கள் எல்லாம் கீட்சரில் கண்ட மேனிக்கி  கீச்சுவதால் நானும் கீச்சிப் பார்த்தேன் ..அட போங்கப்பா இந்த வெளாட்டுக்கு நான் வரல...            

Saturday, July 20, 2013

ஒரு ஜோக்கும், ஒரு பாடலும்...

வழக்கம் போல் வானொலி கேட்டுக்கொண்டிருக்கும்போது காதில் விழுந்தவைகள் இவை :-

மேட்டர் 1:

இது ஒரு ஜோக் , முக்கியமாக மனைவியிடம் அகப்பட்டு முழிக்கும் கணவர்கள் இது மாதிரி ஜோக்குகளுக்கு விழுந்து விழுந்து சிரிப்பார்கள். நான் விழுந்து விழுந்து சிரிச்சதுல ஒரே வலி தான் போங்க. ஏற்கனவே கேட்டுருந்தாலோ , அட இது என்ன பெரிய ஜோக் என்று தோணினால் , உங்க லெவல் வேற பாஸ்.

ஒரு கணவன் மனைவிக்கு , திருமண அனிவேர்சரி நெருங்கியது. மனைவியிடம் அவளுக்கு என்ன வேண்டும் என்று கேட்க்கும் 'மொறை' செய்யாவிட்டால்  'மொத்து' விழுமே என்று, கடமையாக அவளிடம்   கணவன் சென்று ,
   அன்பே நம் கல்யாண நாளுக்கு உனக்கு ஒரு பரிசு கொடுக்க விரும்புகிறேன் என்று ஒரு பிட்டை போட்டான்.
  மனைவி, ஆஹா , நாம இந்த வருசம் கேட்டு வாங்குறதுக்கு முன்னால  ஆடு தானாவே தலையை வெட்டக் கொடுக்குதே என்று சந்தோசத்துடன் , 'ஏங்க , என்னை நான் இதுவரைக்கும் போகாத இடத்துக்கு கூட்டிட்டு போங்க ' என்றால் .

உடனே கணவன் அவள் கையை  பிடித்து இழுத்து  தர தர என்று இழுத்துப் போய்  ஒரு அறையில் கொண்டு விட்டான். அந்த அறை ,  சமையல் அறை .  

மேட்டர் 2

அதே வானொலியில் பல நாட்களுக்குப் பிறகு இந்த பாட்டை  போட்டார்கள். இந்த பாடல் முதலில் கேட்க்கும் போது ஒரு மாதிரியாக இருந்தாலும் , கேட்க கேட்க பிடிக்க ஆரம்பித்துவிட்டது. 
இந்த பாடல் கங்கை அமரனின் வாரிசுகள் , மங்காத்தா புகழ் வெங்கட் பிரபு மற்றும் 'என்ன கொடும சரவணா' புகழ் பிரேம்ஜி  அமரனின் கைவண்ணம் என்பது பின்பு தான் தெரிந்தது.

சரி யு டீபில்  கிடைக்குதா என்று பார்த்த போது , காட்சியுடன் வந்த பாடலைக் கேட்டபோது , ஒரே காமடியாக இருந்தது. பார்த்து ரசியுங்கள் :-




நன்றி மீண்டும் சந்திப்போம்.







Wednesday, July 17, 2013

ஓல்ட் காஸ்கே நமஹ!

அனைத்து குடிமகன்களுக்கும் சமர்ப்பணம்...




Saturday, July 6, 2013

எழுத்தாளர் சுஜாதாவும்,கேபிள் அண்ணனும், நானும்!



தலைவர் சுஜாதா எழுத்துலகில் பல புதுமையை புகுத்தியவர் என்று சொன்னால் மிகையில்லை  என்று அனைவரும் ஒத்துக்கொள்வீர்கள்  என்று நம்புகிறேன். சமீபத்தில் அவர் ஒரு காலத்தில்  ஆவியில் வெறும் 55 வார்த்தைகளில் எழுதிய சிறு கதைகள் கண்ணில் பட்டது.  படித்ததும் ஆஹா வாத்தியார் வாத்தியார் தான் என்று தோன்றியது.

சரி நாமளும் ஒரு முயற்சி பண்ணலாம் என்று தோன்றி நான் கிறுக்கியது முதலில் கொடுக்கிறேன் . வாத்தியாரின் கதையின் தழுவலாகா இருப்பதால் நீங்கள் முன்கூட்டியே யூகித்துவிடுவீர்கள் எனவே முதலில் எனதுகதை  பின்னர் அவரது கதை தொடர்கிறது.


அழகான சீன வாஸ்து பொம்மைகளை துடைத்து வைத்துக் கொண்டிருந்தான் அந்த வாஸ்து கடையில் வேலை செய்யும் குமரன். ஒரு வாடிக்கையாளர் வந்தவுடன் , விவரிக்க ஆரம்பித்தான். ''இந்த பச்சை டிராகனை கிழக்கில் வைத்தால் நீங்கள் விரைவில் கோடீஸ்வரர்..வெள்ளைப் புலி மேற்கில்  , சிவப்பு பீனிக்ஸ் தெற்கில் , கருப்பு ஆமை வடக்கில் வச்சுப் பாருங்க சார் சீக்கிரம் நான் சொன்னது நடக்கும்'' .வாடிக்கையாளர் வாங்க விழையும் போது,
எங்கிருந்தோ வந்த கூட்டம்  , 'எங்க ஆளக் கொன்னுட்டாங்க ,கடைய மூடுங்கடா ' என்று திபு திபு என கத்திக் கொண்டே ஓடியது...வேறு வழியில்லாமல் சடுதியில் கடை சட்டர்  இறக்கப் பட்டது. 'இன்னைக்காவது சம்பளம் வாங்கிட்டு வாங்க , அப்பதான் ராவுக்கு சோறாக்க முடியும் என்று மனைவி சொன்னது குமரனின் மனதை பிராண்ட ஆரம்பித்தது!

இப்ப நம் வாத்தியார் எழுதிய கதை;




எப்படி தான் தமிழ் சினிமா இயக்குனர்கள் ஒன் லைனில் கதை சொல்லி தயாரிப்பாளர்களை மடக்குகிறார்களோ தெரியவில்லை...கேபிள் அண்ணனிடம் கேட்க வேண்டும் .

அப்பறோம் சுஜாதவை எனக்கு நேரில் பழக்கமே இல்லை ,ஒரு கல்லூரி விழாவில் தூரத்தில் இருந்து பாத்ததோட சரி ...உங்களை வரவழைக்க நான் செய்த யுக்தி , தவறாகப் பட்டால் மன்னியுங்கள் நண்பர்களே. 

Monday, July 1, 2013

அது நடந்தே விட்டது!

அன்பு நண்பர்களே , இது ஒரு தகவல் பதிவு …உங்களுக்கு ஏற்கனவே தெரிந்து இருக்கலாம் …

நான் முன் ஒரு பதிவில் ,  மைக்ரோசாப்டின் கிநேக்ட்   என்னும் விளையாட்டு சாதனத்தின் மோசன் கண்ட்ரோல் சென்சர் உதவியுடன் எவ்வாறு  டி வீ  யை ரிமோட் இல்லாமல் வெறும் உடல் அசைவில் மூலம் எவ்வாறு சானல்களையும் , சத்தத்தை குறைப்பது மற்றும் கூட்டுவது  , செய்ய முடியும் என்று ஒரு நண்பர் செய்யும்  வீடியோவை  ஒரு பதிவில் பகிர்ந்து ,  அது போல் விரைவில் சந்தைக்கும் வர வாய்ப்புள்ளது என்று கூறியிருந்த ஞாபகம் .

இன்று வழக்கம் போல் ,  யூடுபில்  மேய்ந்து கொண்டிருந்த போது , அவர்கள் தீடிர் என்று படத்தின் இடைவெளியில் போட்ட ஒரு விளம்பர  விடியோவை , பார்த்தவுடன் , ஆகா இவள்ளவு சீக்கிரமாவா என்று ஆச்சர்யப் பட்டுப் போனேன்…. நீங்களும் அந்த வீடியோ வை இந்த இணைப்பில் பாருங்கள் …ஒரு ஆக்சன் புல் வீடியோ …. இன்னும் கொஞ்ச நாளில் , நீங்கள் உங்கள் வீட்டு நிகழ்வுகளை உடனடி லைவாக , யாருடனும் டிவி வாயிலாகவே பகிர்ந்து கொள்ளலாம் …. ஒரு காலத்தில் வீடியோ கான்பாரன்சுக்கு பட்ட லோல் களை நினைக்கும் போது ,  ஒரு பேமஸ் வசனம் தான் நினைவிருக்கு வந்தது …  Technology has improved a lot yaar!  இதோ அந்த வீடியோ , முழுதும் பாருங்கள் ….

Samsung Motion Control TV