Friday, July 29, 2016

ரஜினி இதை மறந்து விடாதீர்!

வைரமுத்து சொல்லாமல் விட்டது:

எத்தனை பாட்டுக்கள் உங்கள் இமேஜ் கட்டமைப்புக்காக கட்டமைப்புக்காக .

என்னை பார்த்தா ,  சான்ஸ் கிடைக்காததால் , இவ்வாறு சொல்லிவிட்டார் என்பது.

இசைஞானி புறக்கணித்தபோதும் , மொழி மாற்றுப் படங்களுக்கு மட்டும் சினிமா பாடல் எழுதும் சூழல் வந்தபோதும் கலங்கவில்லை.

எல்லோருக்கும் ஒரு நாள் இருக்கும் என்றபோது , எனக்கும் ஒரு நாள் வந்தது. இசைப் புயல் வடிவில். எத்தனை எத்தனை பாடல்கள். சாம்பிளுக்கு சில.

மறுபடியும் எனக்கு ஒரு காலம் வரும். இதே தயாரிப்பாளர் , உங்களுக்கு பாட்டெழுத கேட்காமலா போய்விடுவார்.








Saturday, July 23, 2016

கபாலி - ஒரு கெட்ட கனவு!

தினமணியில் சினிமா பகுதியில் படித்த கட்டுரை...கபாலி பற்றிய என் முதல் பதிவின் விரிவாக்கமாக நான் இதனை படிக்கும் போது உணர்வதால் , பகிர்கிறேன் உங்களுடன்!

ஆயிரம் ரூபாய், ஆயிரத்து ஐந்நூறு ரூபாய் என்று டிக்கெட் முன்பதிவு செய்யப்படுகிறது, கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கள் திரைப்படம் பார்ப்பதற்காக விடுமுறையே அளிக்கிறார்கள் என்றெல்லாம் செய்திகள் பரப்பப்பட்ட நிலையில், ரஜினிகாந்தின் "கபாலி' திரைப்படம் ஏதோ சிசில் பி. டெமிலியின் "பைபிள்'; வில்லியம் வைலரின் "பென்ஹர்'; ஜோசப் மான்கிவிஷின் "கிளியோபாட்ரா', பிரான்சிஸ் போர்டு கொப்போலாவின் "காட்பாதர்', ஜேம்ஸ் கேமரோனின் "டைடானிக்'; ஸ்டீபன் ஸ்பீல்பெர்கின் "ஜுராஸிக் பார்க்' வரிசையில் சர்வதேச அளவில் பேசப்படப் போகிற "மேக்னம் ஓபஸ்' என்று எதிர்பார்த்துப் போய் அமர்ந்தால், பா. ரஞ்சித் இதற்கு முன் இயக்கிய "மெட்ராஸ்' திரைப்படம் அளவுக்குக்கூட ரசிகர்களைத் திருப்திப்படுத்தாததாக அமைந்திருக்கிறது. இந்தத் திரைக்கதையில் நடிப்பதற்கு ரஜினிகாந்த் எதற்கு?
ரஜினிகாந்தின் தோற்றமும் சரி, ரசிகர்களைச் கவர்ந்திருக்கும் அவரது இயல்பான சுறுசுறுப்பும் சரி இப்போது "மிஸ்ஸிங்'. இதை அவரும், இயக்குநரும் உணர்ந்து செயல்பட்டிருந்தால் இப்படி ஒரு திரைப்படத்தை எடுக்கத் துணிந்திருக்க மாட்டார்கள். 
அடித்தட்டு மக்களின் வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டுகிறார் என்பதால், பாராட்டுப் பெற்ற பா. ரஞ்சித் என்கிற இயக்குநரை, "சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்தை வைத்து அவரது இமேஜும் கெடாமல், இவரது "லோ பட்ஜெட்' அடித்தட்டு சிந்தனையும் மாறாமல் படமெடுக்கச் சொன்னதன் விளைவு, ரஜினி ரசிகர்களையும் திருப்பிப்படுத்தாத, நல்ல சினிமா பார்த்த திருப்தியும் ஏற்படாத ஒரு அரைவேக்காட்டு, கலவையாகக் "கபாலி' உருவாகி இருக்கிறது.
தமிழ் சினிமாவில் ஆண்டாண்டு காலமாக அரைத்துக் கொண்டிருக்கும் அரதப் பழசான நல்ல தாதாவுக்கும் கெட்ட தாதாவுக்குமான மோதல்தான் கதை. அந்த தாதாக்களின் கதையை அப்படியே படமாக்கினால் "முற்போக்குவாதி' பட்டம் கிடைக்காது என்பதனால், அதில் தமிழ் உணர்வையும், ஜாதிக் கொடுமையையும் கலந்து படமாக்க முற்பட்டிருக்கிறார் பா.ரஞ்சித்.
மலைகளாகக் கிடந்த மலேசியாவை சீராக்கி பொன் விளையும் பூமியாக மாற்றிய தமிழர்களுக்குத் தலைமை தாங்குகிறார் கபாலியாக வரும் ரஜினி. அந்த முன்னேற்றம் பிடிக்காத மலாய் முதலாளிகள் ரஜினியையும், அவரது குடும்பத்தையும் சிதறடிக்கிறார்கள். பின் அந்த முகாமுக்குள் நடக்கும் தீப்பொறி உரசலில் வெடித்துக் கிளம்பி, "தமிழன் முன்னேறினா பிடிக்காதா..! ஒரு தமிழன் ஆளக் கூடாதா? நான் ஆளப் பிறந்தவன்டா...' என ரஜினி தரும் பதிலடிதான் கபாலியின் கதைக் களம்.
தமிழனுக்கு சம்பள உயர்வு பெற்றுத்தரும் கபாலி, அங்கிருக்கும் தமிழர் தலைவரான நாசருக்குப் பின் தலைமை இடத்துக்கு வருகிறார். நிறைமாத கர்ப்பிணியாய் தன் மனைவி ராதிகா ஆப்தேவை பறிகொடுத்துவிட்டு சூழ்ச்சி வலைகளில் சிக்கி சிறைக்குப் போகும் அவர், 20 வருடங்களுக்குப் பின் திரும்புகிறார். அதன் பின் நடக்கும் அரசியலும், அதைச் சுற்றி நடக்கும் ஆட்டங்களும்தான் கதை. சில உணர்வுப்பூர்வமான பக்கங்கள் இருப்பது மட்டுமே பொறுமை இழக்காமல் நம்மை உட்கார வைக்கின்றன. 
சிறைக்குள்ளிருந்து 20 வருடங்கள் கழித்து வெளியே வரும் கபாலியைப் பார்த்ததும் நிமிர்ந்து அமர்ந்தது தவறு. விறுவிறுப்பாக அடுத்த கட்டம் ஆரம்பிக்கப் போகிறது என்று எதிர்பார்க்கும் ஒவ்வொரு கட்டத்திலும், பொங்கிவரும் பாலில் தண்ணீரை ஊற்றுவதுபோல திடீர் தொய்வை வலுக்கட்டாயமாக ஏற்படுத்தும் திரைக்கதை அமைப்பு. தாதாக்களின் கிராஸ் ஃபயரில் பலியாகும் அப்பாவி பொதுமக்களின் கதிதான் ரசிகர்களுக்கும்! 
கோட் சூட், கூலிங் கிளாஸ், ஒரு கத்தி, பல துப்பாக்கிகளைக்கொண்டு அதைச் சாதிப்பதுதான் ரஜினி ஸ்பெஷல். அது மட்டுமே, ரஜினி இல்லையே. ஆக்ஷனும் இருந்தால்தானே அது ரஜினி. ரஜினியின் பேச்சில் வேகம் இல்லை. நடையில் சுறுசுறுப்பில்லை. நடிப்பில் அவருக்கே உரித்தான தனித்தன்மை இல்லை. அவரை ரொம்பவும் சிரமப்படுத்தி இருக்கிறார்கள்.
ஒவ்வொரு இடத்தையும் "மகிழ்ச்சி' என்று சொல்லி முடித்து வைக்கும் ரஜினியின் உச்சரிப்பில், அதற்குப் பின் சிலபல இடங்களில் "மகிழ்ச்சி' என்பது மட்டுமேதான் ஒலிக்கிறது. அப்படிப் பேசாத சமயம், ஒன்று சுடுகிறார்... அல்லது நீண்ட வசனங்களைப் பேசுகிறார்.
மாறிப்போன மலேசியாவை பிரமிப்போடு பார்க்கிற காட்சி. அந்த வெண்தாடியும், அந்த தாடிக்குள்ளிருந்து அவ்வப்போது கசிந்து வரும், அந்த அலட்சிய சிரிப்பும், பழைய "பாட்சா' ரஜினியுடன் ஒப்பிட்டுப் பார்த்து வேதனைப்பட வைக்கிறது.
மலேசியாதான் கதைக்களம். ஆனால், மலேசியாவை ஒழுங்காகக் காட்டியிருக்கிறார்களா என்றால் இல்லை. கோலாலம்பூரில் பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரத்தை, சென்னை என்றால் அந்தக் காலத்தில் எல்.ஐ.சி. கட்டடத்தையோ, சென்ட்ரல் ரயில் நிலையத்தையோ காட்டுவதுபோலக் காட்டுகிறார்கள். அவ்வளவுதான்.
மலேசியா, சென்னை, தாய்லாந்து என்று அடுத்தடுத்து கதையை நகர்த்திச் செல்லும், "செயின் ரியாக்ஷன்' எத்தனை சுவாரஸ்யமானதாக அமைந்திருக்க வேண்டும்? சர்வதேச நிழல் உலக தாதாக்கள் ஒவ்வொரு சவாலையும் எவ்வளவு மதியூகத்துடன் கடக்க வேண்டியிருக்கும்? ஆனால், ரஜினி கையாளுகிற ஒவ்வொரு சவாலும்... அடப் போங்க சார்... சலிப்பூட்டுகிறது...
வழக்கமாக ரஜினிக்கு இணையான ஆளுமைகள் அவரின் படத்தில் இருப்பார்கள். அப்படி இந்தப் படத்தில் யாரும் இல்லாதது பெரும் குறை. தன்ஷிகா, கிஷோர், ஜான் விஜய், கலையரசன், தினேஷ், ரித்விகா, மைம் கோபி என காட்சிகள் எங்கும் தெரிந்த முகங்கள். இருந்தும், செயற்கைத்தனம். 
படத்தில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்தவர்கள் யாருமே கதையுடன் பொருந்திப்போகவில்லை. "மெட்ராஸ்' படத்தில் நடித்த ஹீரோ, ஹீரோயின் தவிர எல்லோரும் இதில் நடித்துள்ளனர். தனது முந்தைய படத்தில் நடித்தவர்களை இந்தப் படத்திலும் பயன்படுத்த நினைப்பதைப் பாராட்டலாம். அதற்காக பொருத்தமில்லாத கதாபாத்திரங்களில் அவர்களை நடிக்க வைத்தது சரியா...?
ராதிகா ஆப்தே வரும் ஒரு சில இடங்கள் மனதை ஆக்கிரமிக்கிறது. ரஜினியும், ராதிகாவும் சந்தித்துக் கொள்கிற அந்த காட்சி உருக்கம். "உன் கருப்பு கலரை அப்படியே எடுத்து பூசிக்கணும்' என்று பேசுகிறபோது ராதிகாவின் கண்கள் உதிர்க்கிற வெட்கம் பேரழகு. 
பின்னணி இசையில், "நெருப்புடா தீம்' மட்டுமே ஒலிக்கிறது. படம் முழுக்கவே சந்தோஷ் நாராயணனை நினைக்க வைப்பது அது மட்டுமேதான். "பாபா' தோல்விப்படமாக இருந்திருக்கலாம். ஆனால், ஏ.ஆர். ரஹ்மான் இசையில் கவிஞர் வாலியும், கவிஞர் வைரமுத்துவும் எழுதிய அத்தனை பாடல்களும் ரசிகர்களைக் கட்டிப் போட்டன. பாடல் காட்சிகள் ரசிக்கும்படியாக இருந்தன. இதில் அப்படிச் சொல்ல ஒரு பாட்டுக்கூடத் தேறாது. 
வசனங்களில் இயல்பு இருந்தாலும், தனித்துவம் இல்லை. சம்பந்தமே இல்லாமல் திடீரென்று "நான் ஆண்ட பரம்பரை கிடையாதுடா. ஆனால், ஆளப்பிறந்தவன்டா' என்று வசனம் பேசுகிறார் கபாலியாக வரும் ரஜினி. கோட் சூட் போட்டா உங்களுக்கு ஏன் எரிகிறது என்று கேட்பது சரி, அதற்காக மகாத்மா காந்தியை ஏன் ஏளனப்படுத்திக் கொச்சைப்படுத்த வேண்டும் என்று புரியவில்லை.
ஒரு கலைஞன் எந்த வயதிலும், நிலையிலும் நடிக்க விரும்புவதிலும், நடிப்பதிலும் தவறில்லை. ஆனால், அதற்கு அவர் தேர்ந்தெடுத்திருக்க வேண்டிய இயக்குநர் பா. ரஞ்சித் அல்ல. அவரை நன்றாகத் தெரிந்திருக்கும், அவரை வைத்துப் பல நல்ல படங்களை இயக்கி இருக்கும் எஸ்.பி. முத்துராமன், சுரேஷ் கிருஷ்ணா, கே.எஸ். ரவிக்குமார், மகேந்திரன் போன்றவர்கள்.
இயக்குநர் பா. ரஞ்சித்தின் களம் வேறு. பார்வை வேறு. எந்தவித இமேஜ் சுமையும் இல்லாத நடிக - நடிகையர்தான் அவரது படங்களுக்குப் பொருத்தமானவர்கள். குறைந்த பட்ஜெட் படங்கள்தான் அவரது களம். அவரை ரஜினியைக் கதாநாயகனாக வைத்துப் படம் இயக்கச் சொன்னது, குருவி தலையில் பனங்காயை வைத்த கதையாகி விட்டிருக்கிறது.
எல்லாம் போகட்டும். எந்த ஒரு முடிவும் இல்லாத ஒரு உப்புச்சப்பே இல்லாத கிளைமாக்சுடனா ஒரு ரஜினிகாந்தின் படத்தை முடிப்பது? இது ரஜினிகாந்த் படமல்ல, பா. ரஞ்சித் படம் என்றால், இத்தனை பெரிய பட்ஜெட்டிலா இந்தப் படத்தை எடுப்பது?
வெறும் கற்சிலையைப் பார்க்கக் கோயில்களில் சிறப்பு தரிசன டிக்கெட் வசூலிக்கும்போது, மனிதக் கடவுளான ரஜினி படத்திற்கு ரூ.1,000 வசூலிப்பதில் தவறில்லை என்று நியாயப்படுத்துகிறீர்களாமே, ரஞ்சித்? சபாஷ்! என்னே உங்களது முற்போக்கு சிந்தனை! ரஜினியை மனிதக் கடவுளாகக் கருதும் நீங்கள், அவரை அவரது பாணியிலேயே நடிக்க வைத்துப் படம் இயக்கி இருக்கலாமே. பிறகு எதற்காக "ரஞ்சித் படம்' என்கிற போலித்தனம்?
மொத்தத்தில் வழக்கமான ரஜினிகாந்த படமாகவும் இல்லாமல், பா. ரஞ்சித் படமாகவும் இல்லாமல், தொய்வில்லாத விறுவிறுப்பான திரைக்கதையும் அமைக்கப்படாமல், துண்டு துண்டான காட்சிகளை வெட்டி ஒட்டியதுபோல உருவாக்கப்பட்டிருக்கிறது "கபாலி' திரைப்படம். 
அட்டகாசமாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் மலேசிய நடிகர் வின்ஸ்டன் சாவோ அல்ல இந்தப் படத்தின் வில்லன். ரஜினியின் மேஜிக் துளிக்கூட இல்லாத கதைதான் கபாலிக்கு வில்லன்.
நமது மனத்திரையில் ரஜினிகாந்தை சூப்பர் ஸ்டாராகவே தொடரவிடுங்கள். அவரை இனியும் நடிக்கச் சொல்லி சிரமப்படுத்தி, அவருக்கு இருக்கும் இமேஜையும், ரசிகர்களின் பேரன்பையும் வேரறுத்து விடாதீர்கள். "கபாலி' ஒரு கெட்ட கனவாக இருந்துவிட்டுப் போகட்டும்!



கபாலி, என் கேள்விக்கென்ன பதில்?


தினமலரில் தமிழர் நீதி என்பவர் கபாலி சம்பந்தமான ஒரு செய்திக்கு வாசகர் கருத்தாக இதை அனுப்பியுள்ளார். எனக்கு பிடித்ததால் உங்களுக்கு பகிர்கிறேன்!  மகிழ்ச்சி!

இப்படியும் தியேட்டருக்கு வெளியில கொந்தளிக்கிறார்கள் . தொழிலதிபர் ரஜினி நடித்த படத்தை(கபாலி படம் பார்க்காதீங்கோ ) பார்க்கக்கூடாதாம் . சிவாஜி ராவ் ரசிகர்கள் பொங்குகிறார்கள். 

ரஜினி அவர்கள் பொதுவாக வெளியே வரும் போது ஒரு வெள்ளை சட்டை, வேட்டி முகத்தில் தாடியுடன் சன்யாசி போல எளிமையாக வருவது அனைவருக்கும் பிடிக்கும். ஆனால் கபாலி படத்தின் பட்ஜெட்? சுமார் 100 கோடிக்கு மேல் சூப்பர் ஸ்டாருக்கு சம்பளம் மட்டும் 20 கோடிக்கு மேல் மற்றும் லாபத்தில் பங்கு வேறு இவ்வளவு எளிமையான மனிதருக்கு எதற்கு இவ்வளவு பணம்? அப்போ அந்த எளிமை மக்களை ஏமாற்றும் நாடகமோ??

 ரஜினி சொத்து மதிப்பு எவ்ளவு தெரியுமா சுமார் சுமார் 10,000 கோடி நடிகர் சூர்யா கூட “அகரம் அறக்கட்டளை” தொடங்கி நடத்தி வருகிறார், ரஜினி என்னும் மகா அரசியல்வாதி செய்தது என்ன? 2014- ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகர் ஒருவர் இணையத்தில் வெளியிட்ட கடிதத்தை உங்களுக்கு தருகிறேன். 

சூப்பர்ஸ்டார் திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு,
 வணக்கம். உங்கள் ரசிகன் ஒருவன் எழுதும் கடிதம் இது. உங்களை பற்றி பேசினாலும் ஹிட். ஏசினாலும் ஹிட் என்ற கணக்கில் இந்த கடிதத்தை நான் நிச்சியமாக எழுதவில்லை. உங்கள் படங்களை பற்றி நான் இங்கே விமர்சிக்கபோவதும் இல்லை. 

ஏனென்றால், ஓவர் ஆக்டிங் இல்லாமல், கதைக்கு தேவையான எதார்த்த நடிப்பை தருவதில் தமிழில் உங்களுக்கு நிகர் வேறு யாருமில்லை என்பது என் கருத்து. 

“ஆறிலிருந்து அறுபது வரை”, “ஜானி” போன்ற படங்களில் உங்களது நடிப்பை பார்த்து வியந்து இருக்கிறேன் இல்லை இன்னமும் வியந்து கொண்டே இருக்கும் உங்கள் ரசிகன் நான். “எந்திரன்” னிலும் உங்கள் நடிப்பு அருமை. லிங்கா படம் ஏன் ஓடவில்லை கதை சரியில்லாதது மட்டுமல்ல உங்கள் சுயரூபம் அறிந்ததால் பல ரசிகர்கள் படம் பாா்பதை தவிர்த்துவிட்டனர் என்பது தான் உண்மை, உங்கள் அரசியல் பிரவேச அறிவிப்புகள், ஜெயலலிதா தொடங்கி ஒக்கேனக்கல் வரை நீங்கள் தந்த மாறுபட்ட அறிக்கைகள் ஆகியவற்றை பற்றியும் நான் இங்கே குறை கூற போவதில்லை. 

அரசியலுக்கு நீங்கள் வருவதும், வராமல் போவதும், வருவதாக கூறிக்கொண்டே இருப்பதும் உங்கள் தனிப்பட்ட முடிவு. நான் உங்களுக்கு இந்த கடிதம் எழுவதற்க்கான மையப்புள்ளியாய் இருப்பது வேறு விஷயம். அது நான் உட்பட, தமிழ்நாட்டு பொதுமக்கள் சம்பந்தப்பட்ட விஷயம். ரஜினிகாந்த், இன்று தமிழ் சினிமாவில் மட்டும் அல்லாது உலக அளவிலும் உங்களின் இந்த பெயர் பிரபலம். இன்று இந்திய சினிமாவில், ஒரு படத்துக்கு அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர் நீங்கள்.. 

ஆசியாவில், ஜாக்கிசானுக்கு அடுத்த இடத்தில் சம்பளம் வாங்கும் நடிகரும் நீங்கள்தான். தெரிந்த கணக்குபடி, உங்கள் சம்பளம் சுமார் இருபத்தி ஐந்து கோடியை தாண்டும் என்பது அனைவருக்கும் தெரிந்த செய்தி. திரையுலகமும், ரசிகர்களும் உங்களுக்கு தந்திருக்கும் இந்த இடத்திற்கு மிகபொருத்தமானவர்தான் நீங்கள். “சூப்பர் ஸ்டார்” என்று உங்கள் இடத்தில் இன்னொருவரை வைத்து நினைத்து பார்க்ககூட எங்களால் முடியவில்லை. என்னுடைய கேள்வி இதுதான்….

நீங்கள் சினிமாவில் சம்பாதிக்கும் கோடிக்கணக்கான ருபாய் பணத்தை என்ன செய்கிறீர்கள்? சமுகத்திற்கு, தமிழ்நாட்டிற்கு உங்கள் பங்களிப்பு என்ன? நமது நாட்டில் பிரதமரை விமர்சிக்கலாம். ஏன், கோவில் வாசல்முன்பு கூட்டம்போட்டு, ‘பகுத்தறிவாளர்கள்’ என்ற பெயரில் கடவுளை கூட கன்னாபின்னாவென்று பேசலாம். நான், எனக்கு பிடித்த சினிமா நடிகரான உங்களிடம் எனது கேள்வியை, சந்தேகத்தை கேட்க கூடாதா? ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த அரசியல்வாதிகளை போல, நான் உங்களை இப்படி கேள்வி கேட்க காரணமே …சாட்சாத் நீங்கள்தான்.

 “அன்னை தமிழ்நாட்டுல நான் அனைவருக்கும் சொந்தம்டா” என்று எங்களை நோக்கி கை நீட்டியவர் நீங்கள்தான். நீங்களே கதை,வசனம் எழுதிய “பாபா” படத்தின் இறுதிகாட்சியில்,கடவுளை விட பெரியது மக்கள் சேவைதான் என்று எங்களுக்கு அறிவுரை சொன்னது நீங்கள்தான். கமல், தான் சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தை, அதே சினிமாவில் முதலீடு செய்கிறார். விஜயகாந்த், தான் சொன்னபடி அரசியலுக்கு வந்து செலவு செய்கிறார். நேற்று வந்த நடிகர் சூர்யா கூட “அகரம் அறக்கட்டளை” தொடங்கி, ஏராளமான ஏழை மாணவர்களின் கல்விசெலவுகளை ஏற்றுவருகிறார். நடிகர் விஜய், நிறைய கம்ப்யூட்டர் சென்டர்களை தொடங்கி, இலவச பயிற்சி தருகிறார். ஏன், த்ரிஷா கூட புற்றுநோய் மருத்துவமனை, அநாதை இல்லம் என்று அவ்வபோது வலம் வருகிறார். ஆனால், இவர்களுக்கு எல்லாம் முன்னுதாரணமாக இருக்கவேண்டிய நீங்கள் செய்த சமுக பங்களிப்புகள் என்ன? 

“நான் ஆன்மிகவாதி”, “தாமரை இலை தண்ணீர் போல வாழ்பவன்”, “இமயமலையை விரும்பும் பற்றில்லாதவன்” என்றும், குட்டி தத்துவ கதைகள், ரமண மகரிஷியின் எளிமை என்றெல்லாம் நீங்கள் பேசுவதற்கும், வெளிக்காட்டி கொள்வதற்கும் , யாதார்த்ததில் நீங்கள் செய்யும் காரியங்களுக்கும் இடையே அந்த ‘இமயமலை’ அளவுக்கு முரண் இருக்கிறேதே, அய்யா. “இமயமலை”யை விரும்புகிறவர், வசதி அற்றவருக்கும் தரமான சேவை தரும் மருத்துவமனையோ அல்லது கல்விநிலையமோ அல்லவா நடத்தவேண்டும்? இப்படி நான் எழுதியதிற்கு மன்னிக்கவும். 

அரசியலை போலவே ஆன்மிகமும் உங்கள் சொந்த விஷயம். ஆன்மிகத்தையே தொழிலாக வைத்திருக்கும் சாமியார்கள் எல்லாம் உத்தமர்களா என்ன? நான், உங்களுக்கு இப்படி ஒரு கடிதம் எழுதியதின் காரணத்திற்கு வருகிறேன். நீங்கள் கட்டிய ஸ்ரீ ராகவேந்திரா கல்யாண மண்டபத்தின் ஒரு நாள் வாடகை…கிட்டத்தட்ட ஒரு லட்ச ருபாய். இதன் மூலம் உங்களுக்கு கிடைக்கும் வருமானம் ஆண்டுக்கு குறைந்தபட்சம் சுமார் மூன்று கோடி ருபாய். 

1991 – இல் நீங்கள், உங்கள் மனைவி லதா அவர்களின் மூலம் “ஆசிரமம்” என்று ஒரு பள்ளியை சென்னையில் தொடங்கியபோது மிகவும் சந்தோஷம் அடைந்தேன். பெயரை பார்த்துவிட்டு,அது ஏதோ ஏழை குழந்தைகளுக்கான இலவச கல்வி நிலையம் என்று நினைத்தேன். அப்புறம்தான், புரிந்தது, அது, நுனி நாக்கில் I am studying in Ashram என்று பேசும் மேல்தட்டு, மேல்நடுத்தர வர்க்க பிள்ளைகள் மட்டுமே படிக்ககூடிய அல்லது படிக்க முடிந்த ஒரு பள்ளி என்று. சென்னைவாசிகளை கேட்டால் அவர்களே சொல்வார்கள். இன்று, சென்னையில், அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளில்… உங்களது ஆசிரமமும் மன்னிக்க ஆஸ்ரமும் ஒன்று. 

TASSC (The Ashram School Specialised Curriculum) என்று மார்க்கெட்டிங் செய்து, கொள்ளைலாபம் பார்க்கும் உங்கள் பள்ளியை பற்றி இரண்டு உதாரணங்களை இங்கே உங்கள் முன்வைக்கிறேன். “அங்கு படித்து கொண்டுஇருந்த என் மகனை வேறு பள்ளிக்கு மாற்றிவிட்டேன். வெளியில் தெரிவதைபோல, சிறந்த கல்வி தரப்படுவதில்லை. அதே சமயம், ஆண்டுக்கு 5000 ருபாய் தொடங்கி கட்டணத்தை ஒவ்வொரு வகுப்பிலும் ஏற்றிகொண்டே செல்கிறார்கள்” என்று தெரிவித்தார் ஒரு பெண்மணி. 

சென்ற வருடம் ஜூன் மாதம், complaints.india இணையதளத்தில் உங்கள் பள்ளியில் பணிபுரிந்த ஒரு ஆசிரியை “ஆஸ்ரம் பள்ளி நிர்வாகம் எங்களுக்கு ஒழுங்காகவே சம்பளம் தருவது இல்லை. திருமதி.லதா ரஜினியிடம் புகார் அளித்தும் பயனில்லை. உடனடி நடவடிக்கை எடுங்கள்” என்று வெளிப்படையாகவே புகார் தெரிவித்தது உங்களுக்கு தெரியுமா? தலைவா என்று உங்களை அன்புடன் அழைத்து, உங்கள் கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்யும் ஒரு ஏழை ரசிகன், தனது வீட்டு குழந்தையை உங்கள் பள்ளியில் சேர்க்கவந்தால், நீங்கள் உருவாக்கி இருக்கும் “பிம்பங்கள்” எல்லாம் உடைந்து சுக்குநூறாக சிதறிவிடுமே சார். 

முழுவதும் இலவச கல்வி தராவிட்டாலும் பரவாயில்லை. ஒரு பத்து பணக்கார வீட்டு பிள்ளைகளை சேர்த்து கொள்ளும் உங்கள் பள்ளி நிர்வாகம், குறைந்தபட்சம் நாலு ஏழை,நடுத்தர வகுப்பு பிள்ளைகளையாவது கட்டணம் இல்லாமல் சேர்த்துகொண்டால் என்ன? சமீபத்தில் அரசு பள்ளி கட்டண முறைகளை முறைபடுத்திய பின்புதான், புகார்களுக்கு பயந்து உங்களின் ஆஸ்ரம் போன்ற பள்ளிகளில் கட்டணம் ஓரளவுக்கு கட்டுப்பாட்டில் வந்து இருக்கிறது. 

அடுத்தது, உங்கள் துறைக்கு வருகிறேன். நீங்கள் சார்ந்த சினிமாதுறை பிரச்சினைளை எப்போதாவது முன் நின்று தீர்த்து இருக்கீர்களா? அரசின் தயவை எதற்கு எடுத்தாலும் அவர்கள் நாடுவதை தடுத்து,உங்கள் சொந்த செலவில் அவர்களின் தேவைகளை எப்போதாவது நிறைவேற்றி உள்ளீர்களா? சினிமா உங்களுக்கு தொழில். அதில் நீங்கள் பணமும், புகழும் குவிப்பது நியாயமானதே.. அதுதான், சினிமாவில் கோடிகோடியாய் சம்பாதித்து வருகிறீர்களே, பள்ளி போன்ற இன்ன பிற விஷயங்களில், சேவை மனப்பான்மையோடு செயல்பட ஏன் சார் உங்களுக்கு மனம் வரவில்லை? “என் உடல், பொருள், ஆவியை தமிழுக்கும், தமிழர்க்கும் கொடுப்பது முறையல்லவா”. 

– படையப்பா படத்தின் பாடல் வரிகள் நினைவில் இருக்கிறதா? சொல்லுங்கள் சார், நீங்கள் இதுவரை தமிழுக்கு, தமிழக மக்களுக்கு என்ன கொடுத்தீர்கள் அல்லது கொடுக்க போகிறீர்கள்? எல்லா தொழிலிலும் உங்களுக்கு சுயநல நோக்கும், லாபமும்தான் பிரதானமா? “பாட்ஷா” படத்தில் சொன்னதுபோல, உங்கள் இதயத்தை தொட்டு பதில் சொல்லுங்கள். உங்கள் பதில் “ஆம்” என்றால், அது ஒன்றும் தவறு இல்லை. நீங்கள் அரசியல்வாதிகளை போன்று ஊழல் செய்தோ, அதிகாரிகளை போன்று லஞ்சம் வாங்கியோ சம்பாதிக்கவில்லை. இந்த வயதிலும், எந்திரன் படத்துக்கான உங்கள் உழைப்பை கண்டு வியந்தவர்கள் நாங்கள். 

சென்னை மழை வெள்ளத்தின் போது நீங்கள் செய்த உதவிகள் தான் அதிகம் விமர்சனங்களுக்கு உள்ளானது, ஏன் கமல் போன்ற நடிகர்கள் உதவி செய்யவில்லை இருந்தாலும் அவர்களை விட்டு விட்டு உங்களை மட்டும் விமர்சனம் செய்ய காரணம் மற்ற நடிகர்கள் யாரும் உங்களை போல ரசிகர்களை சுய லாபத்துக்காக பயன்படுத்துவதில்லை,

 ஆனால், எனது சில கோரிக்கைகளை மட்டும் உங்கள் முன்வைக்கிறேன். எதோ “எந்திரன்” விஞ்ஞானபடம் என்பதால் தப்பிவிட்டது. கண்டிப்பாக அடுத்துவரும் உங்கள் “கபாலி ” படத்தில், மலேசியா தமிழ் மக்களுக்கு நீங்கள் போராடுவது போன்ற காட்சிகள் இருக்கும். தமிழ், தமிழ்நாடு, தமிழ் மக்கள் போன்ற உணர்வுபூர்வமான வார்த்தைகளை, அரசியல்வாதிகளை போலவே, உங்கள் சொந்த ‘பிசினஸ்”க்கு தயவுசெய்து பயன்படுத்தாதீங்க, ரஜினி சார். 

ரசிகர்களுக்கு பொதுவான சில கேள்விகள், 100 கோடி செலவு செய்யாமல் படம் எடுக்க முடியாதா? தற்போது எல்லாம் சில லட்சங்களில் எடுத்த படங்கள் நல்ல வரவேற்பை பெறுகிறதே? பிறகு ஏதற்கு 100 கோடி ஆக உங்களின் நோக்கம் சினிமா என்ற பெயரில் உச்ச நடிகரை வைத்து மிகப்பெரிய அளவில் வியாபாரம் செய்ய வேண்டும் என்பது தான் ஒரு திரைப்படத்தின் நோக்கம் இதுவா?

 ஒரு திரைப்படத்தை தயாரிக்க 100 கோடி செலவு செய்ய கூட தயாராக இருக்கும் தயாரிப்பாளர்கள், ஏழை மக்களுக்கு 1 ரூபாயக்கு உதவி செய்ய மனம் வருவதில்லை ஏன்? 100 கோடி போட்டால் 200 கோடி வரும் அது முதலீடு, திருட்டு விசிடிக்கு எதிராக போராடும் சினிமாகாரர்கள் தியேட்டரில் டிக்கெட் விலை அதிகமாக இருக்கிறது என்று ரசிகர்களுக்கு ஆதரவாக போராடியது உண்டா? ரசிகர்கள் தான் முட்டாள்களாயிற்றே படம் பார்க்க 5000 ருபாய் கூட கொடுக்க தயாராக இருப்பார்களே, எனது தலைவர் படம் 100 கோடி வசூல் சாதனை, Record Breaking என்று மார்தட்டிக் கொள்ளும் ரசிகர்களுக்கு ஒன்று சொல்ல ஆசை படுகிறேன், அந்த பணம் ஏழைகளுக்கு உதவ போகிறதா? வசதியில்லா மாணவர்களின் கல்விக்கு உதவவா போகிறது ? 
ஒரு கோடிஸ்வரனை மேலும் கோடிஸ்வரனாக்க நமது 120 ருபாய் போகிறது அவ்வளவு தான் இதில் என்ன அவ்வளவு பெருமை நமக்கு, கோடிக் கணக்கில் வசூல் சாதனை செய்த பணம் கறுப்பு பணமாக வெளிநாட்டு முதலீடாக போகிறது என்பது உங்கள் எத்தனை பேருக்கு தெரியும்? 

இதில் திரைப்படங்களுக்கு வரி விலக்கு வேறு வெட்கக்கேடு, சாதாரண மக்கள் 10,000 போன் வாங்கினால் 300 ரூ முதல் 500 ரூ வரை வரி ஆனால் கோடிக்கணக்கில் எடுக்கபடும் படங்களுக்கு வரி விலக்கு? அதற்காக திரைப்படங்களே பார்க்க வேண்டாம் என்று சொல்ல வில்லை ரசிகர்களுக்காக நேர்மையாக பாடுபடும் எத்தனையோ கலைஞர்கள் இருக்கிறார்கள் அவற்றை வரவேற்போம். 

மக்களாகிய நாம் சமுதாயத்தில் நடக்கும் நிகழ்வுகளை ஆராய்ந்து பார்த்தால் நம்மை சுற்றி நடக்கும் பல அரசியல்கள் புலப்படும் அரசியல்வாதிகள் மக்கள் முன் சிறந்த நடிகர்களாகவும், சினிமா நடிகர்கள் திரைக்கு பின்னால் மக்களை சுரண்டும் சிறந்த அரசியல்வாதிகளாக மாறிவிட்டனர் என்பதில் எந்த சந்தேகம் இல்லை. சிந்திப்பீர்!

கபாலி , படமாடா இது!!!


எந்த ஒரு விஷயத்திற்கும்  அதிக ஆர்ப்பாட்டம் செய்ததால்  , சிறுது காலத்திற்கு அந்த ஈர்ப்பு இருக்கும் . சினிமா வியாபாரிகள்  மற்றும் பொதுவாக வியாபாரிகள் , அந்த ஈர்ப்பை , காசாக மாற்றி தங்கள் குறிக்கோளை அடைந்து விடுவார்கள்.  கபாலி விஷயத்திலும் முன் போல் , மீடியாவை நன்கு கவனித்து , ஈர்ப்பை  ஏகத்துக்கும் எகிறவைத்து , நன்றாக வசூலித்து  விட்டார்கள்.  பொதுவாக மலிவான சரக்கு அதிக விளம்பரத்தில் நன்றாக விற்க வைக்கப்படும்.  இங்கும் அதுவே!

இத்தனை கோடி பணத்தை வாரி இறைத்து , மீண்டும் தங்கள் பெட்டியை ரொப்பிக் கொள்ள இந்த படம் வினியோகஸ்தர்களுக்கு உதவி உள்ளதே தவிர ,  இந்த படம் இவர்கள் எல்லாம் பீற்றியது போல் ,  ரஜினிக்கு ஒரு மகுடம் , மற்றும் தாணு கலைப் படைப்புக்கு ஒரு மகுடம் என்பது எல்லாம் , காதில் வைக்கும் பூ.

ஒன்றுமே புதிதாக எதுவுமே  இல்லை.  இந்த ரஞ்சித் அப்படி என்ன புதிதாக பண்ணினார் (மெட்றாஸில்) என்று இவருக்கு இந்த வாய்ப்பை கொடுத்தார்களோ தெரியவில்லை. அதிலும் , இந்த கதையில் அப்படி என்ன சிலிர்ப்பூட்டும் விஷயத்தை ரஜினி கண்டு கொண்டு ஓகே பண்ணினார் என்றும் தெரியவில்லை.

ஆரம்ப காட்சி ,  சங்கரின் படத்திலிருந்து உருவியுள்ளார். முடிவு காட்சி , மணிரத்தினத்தின் படத்தில் இருந்து உருவியுள்ளார்.  அதிலும் நாயகனில் கமலை கொல்பவன் அரை கிறுக்கு , இதிலும் டைகர் ஒரு அரை கிறுக்கு. அடங்கொன்னியா , புதுசா யோசிக்க மாட்டீங்களாடா!

பாவம் ரஞ்சித் என்ன பண்ணுவார் , திடீரென்று ஒரு லக்கி பிரைஸ் , ரஜினி ரூபத்தில் ...கிரியேட்டிவிட்டி ஒன்றும் தோன்றியிருக்காது அந்த பதட்டத்தில்.  எனவே , அது , இது என்று கொஞ்சம் கொஞ்சம் கிள்ளிப் போட்டு ஒரு அவசர சமையல்  செஞ்சிருக்கார்.

உங்களுக்கெல்லாம் இந்த அனுபவம் கட்டாயம் ஏற்பட்டிருக்கும். பலர் சொன்னார்கள் என்று ஒரு உணவு விடுதிக்கு சாப்பிட செல்வீர்கள். சொன்னவர்கள் இது நல்லா இருக்கும் , அது நல்லா இருக்கும் என்று உங்களை ஏத்தி விட்டு இருப்பார்கள். நீங்களும் ஆர்வத்துடன் , அதை ஆர்டர் பண்ணிவிட்டு , ஆசையுடன் சாப்பிட்டு இருப்பீர்கள்...அப்புறம் தான் தெரியும் , அந்த அளவுக்கு உணவு ஒர்த் இல்லை என்று. என்ன செய்ய ,  உண்டாகிவிட்டது , பணத்தை கொடுத்துவிட்டு வெளியே வந்திருப்பீர்கள். கபாலியும் அது தான், நண்பர்கள், குடும்பம் என்று , பணத்தை வாரி இறைத்து விட்டு சென்றாகி விட்டது, என்ன ஓடுகிறதோ அதை பார்த்து விட்டு வெளியே வருவது தான். சிலாகிக்க ஒன்றும் இல்லை.  எல்லாம் பாம்பாட்டி செய்யும் மோடி மஸ்தான் வேலை , வேற என்ன சொல்ல.

நேற்று டிவியில் , Focus என்ற Will Smith நடித்த படத்தை டிவி யில் முதல் முதலாக போட்டார்கள். ஒரு பிக் பாக்கட் காரன் எவ்வளவு சாமர்த்தியமாக மற்றவர்களை ஏமாற்றுகிறான் என்று காமிக்கிறார்கள். ஒவ்வொரு கட்சியும் யூகிக்க முடியாத காட்சிகள். எங்கேயும் கிளிஷே என்று சொல்லப்படுகிற சமாச்சாரம் இல்லை.  நம்ம ஊர் டைரக்டர்கள் எப்ப இப்படி படம் எடுப்பார்கள்.

ரஜினி,கமல், அஜித், விஜய் என்று சுற்றி திரியும் கதா நாயகர்களே நீங்கள் நினைத்தால் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடியும். செய்வீர்களா , செய்வீர்களா?
கபாலி மாதிரி காலி டப்பா படங்களை ஒதுக்கிவிட்டு , கொடுக்கும் காசுக்கு நல்ல சரக்கு விற்கப் பாருங்கள்!!